வேலூரில் 2-வது மனைவியுடன் விவசாயி படுகொலை முதல் மனைவி வெறிச்செயல்


வேலூரில் 2-வது மனைவியுடன் விவசாயி படுகொலை முதல் மனைவி வெறிச்செயல்
x
தினத்தந்தி 9 Nov 2018 9:33 PM GMT (Updated: 9 Nov 2018 9:33 PM GMT)

வேலூரில் 2-வது மனைவியுடன் விவசாயி இரும்புக்கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அங்கநாதவலசை கிராமம் ஈசனேரிவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). விவசாயி. இவருடைய மனைவி கலா (37). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரும் விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலாவுக்கும், ஏகாம்பரத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு கலா, கணவனை பிரிந்து கள்ளக்காதலன் ஏகாம்பரத்துடன் கேரளாவுக்கு சென்று விட்டார்.

அதன் பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியை சேர்ந்த சுஜாதா (30) என்ற பெண்ணை சண்முகம் 2-வதாக திருமணம் செய்துகொண்டார்.

சேர்ந்து வாழ விருப்பம்

இது பற்றி தெரியவந்ததும் கலா ஏகாம்பரத்தை அழைத்து கொண்டு திருப்பத்தூர் வந்தார். மேலும் அவர் சண்முகத்திடம், எதற்காக 2-வது திருமணம் செய்து கொண்டாய்? என கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் கணவர் சண்முகத்துடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என தெரிவித்தார். தனது மனைவி திருந்தி விட்டார் என்று எண்ணிய சண்முகம் அதற்கு சம்மதித்தார்.

ஆனாலும் கலா தனது கள்ளக்காதலன் ஏகாம்பரத்துடனான உறவை முறித்து கொள்ளவில்லை. தொடர்ந்து அவர்கள் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

அதோடு கலாவுக்கு சண்முகம் 2-வது திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை. எனவே சண்முகம், சுஜாதா ஆகிய 2 பேரையும் கூலிப்படையை ஏவி தீர்த்து கட்ட கலாவும், ஏகாம்பரமும் முடிவு செய்தனர்.

அடித்துக்கொலை

அதன்படி ஈரோட்டை சேர்ந்த நாகராஜன் என்பவர் உள்பட சிலரை அவர்கள் வரவழைத்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் கலா, ஏகாம்பரம் ஆகியோர் கூலிப்படையினருடன் இரும்புக்கம்பிகளை எடுத்துக்கொண்டு சண்முகம் வீட்டிற்கு சென்றனர்.

சண்முகம், சுஜாதா இருவரும் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் வீட்டின் கதவை தட்டினர். மனைவியின் குரலை கேட்ட சண்முகம் கதவை திறந்துள்ளார்.

உடனே உள்ளே புகுந்த அவர்கள் இரும்புக்கம்பியால் சண்முகத்தையும், சுஜாதாவையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story