பன்றி காய்ச்சலுக்கு தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கடைகளில் மருந்து மருந்து வணிக சங்கம் அறிவிப்பு


பன்றி காய்ச்சலுக்கு தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கடைகளில் மருந்து மருந்து வணிக சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Nov 2018 10:00 PM GMT (Updated: 9 Nov 2018 9:38 PM GMT)

பன்றி காய்ச்சலுக்கு தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் மருந்து கடைகளில் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மருந்து கட்டுப்பாட்டு துறையும், மருந்து வணிக சங்கமும் கூட்டாக அறிவித்து உள்ளன.

சென்னை,

டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு மருந்துகள் தமிழகம் முழுவதும் உள்ள மருந்து கடைகளில் கையிருப்பு வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குனர் கே.சிவபாலன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மருந்து வணிக சங்க பொதுச்செயலாளர் கே.கே.செல்வன், பொருளாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்ததும், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குனர் கே.சிவபாலன், தமிழ்நாடு மருந்து வணிக சங்க பொதுச்செயலாளர் கே.கே.செல்வன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

மருந்து கிடைக்க ஏற்பாடு

பன்றி காய்ச்சலுக்கு தேவையான மருந்துகளை எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்க அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்ய வழிவகுக்கும். ஏற்கனவே 3 ஆயிரம் கடைகளில் கையிருப்பு வைக்கப்பட்டு இருந்தது. தற்போது 10 ஆயிரம் கடைகளில் மருந்து கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இது தவிர ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் எல்லா வகையில் எல்லா நேரத்திலும் மருந்து தயாராக இருக்கிறது. மேலும் www.drugscontrol.tn.gov.in, www.tncda.com என்ற இணையதளத்தில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் மருந்து வணிக சங்க நிர்வாகிகளின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் தேவையான மருந்துகள் கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்து தரப்படும். அந்த மருந்தின் அதிகபட்ச விற்பனை விலையை விட அதிகமாக விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story