பொதுமக்களுக்கு இலவசமாக ‘ஹெல்மெட்’ வழங்கினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


பொதுமக்களுக்கு இலவசமாக ‘ஹெல்மெட்’ வழங்கினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 9 Nov 2018 11:00 PM GMT (Updated: 9 Nov 2018 9:49 PM GMT)

பொதுமக்களுக்கு இலவசமாக ‘ஹெல்மெட்’ வழங்கினால் என்ன? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களும், பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணியவேண்டும். காரில் செல்பவர்கள் கண்டிப்பாக ‘சீட் பெல்ட்’ அணியவேண்டும் என்ற மோட்டார் வாகனச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹெல்மெட் அணியாதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து போலீஸ் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதை நீதிபதிகள் படித்து பார்த்தனர். பின்னர், ‘ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இதுமட்டுமல்லாமல், துணை கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் எல்லாம் ரோட்டில் வந்து நின்று ‘ஹெல்மெட்’ அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் கொடுக்கின்றனர். விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். இதனால் என்ன பயன்?. ஹெல்மெட் அணியாமல் பலர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு தான் இருக்கின்றனர். நாங்கள் (நீதிபதிகள்) காரில் செல்லும்போது ‘சீட் பெல்ட்’ அணிகிறோம். அதுபோல மக்கள் மத்தியில் சுய ஒழுக்கம் வர வேண்டும். சட்டத்தை மதித்து ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவேண்டும். எத்தனை வக்கீல்கள், குறிப்பாக பெண் வக்கீல்கள் எத்தனை பேர் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளை ஓட்டுகின்றனர்? சட்டம் என்றால், அதை மக்கள் ஒழுக்கத்துடன் அமல்படுத்த முன்வரவேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், ‘ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இருந்தாலும், மீண்டும் அவர்கள் ஹெல்மெட் அணியாமல்தான் செல்கின்றனர்’ என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், ‘தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம். அவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டம் இருந்தாலும், அதை போலீசார் பயன்படுத்துவது இல்லை. நடவடிக்கை எடுப்பதும் இல்லை’ என்றனர். அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல், ‘பொதுமக்களுக்கு தமிழக அரசே இலவசமாக ஹெல்மெட் வழங்கலாம்’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘20 தொகுதிகளுக்கு ‘ஐடியா’ கொடுக்கிறார்’ என்று கிண்டலாக கருத்து கூறினர்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், ‘மோட்டார் சைக்கிளை பதிவு செய்யும்போது, கண்டிப்பாக இரு ஹெல்மெட்கள் இருக்கவேண்டும். ஹெல்மெட்கள் இல்லாத வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது’ என்றார்.

பின்னர், ‘பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சிலர் செல்கின்றனர். இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையெல்லாம் இப்போது கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர்.

கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் அந்த நபர்களை ஏன் கைது செய்யவில்லை? இப்போது, மனுதாரர் வக்கீல் இலவசமாக ஹெல்மெட் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுகிறார். இதை ஏன் பரிசீலிக்கக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்க கூடுதல் அட்வகேட் ஜெனரல் கால அவகாசம் கேட்டதால், விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Next Story