‘சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம்


‘சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2018 10:30 PM GMT (Updated: 9 Nov 2018 10:03 PM GMT)

திருப்பூரில் ‘சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டிபிளஸ் தியேட்டர் முன்பு காலையில் அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர் தினேஷ்குமார் தலைமையில் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தியேட்டர் முன்பும், சாலையோரமும் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதால், காலை 10.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. இதைப்போல சேலம் 5 ரோடு அருகே உள்ள ஒரு தியேட்டரிலும் காலைக்காட்சி ரத்து செய்யப்பட்டது. இந்த போராட்டங்களால் மாநகரில் சர்கார் படம் திரையிடப்பட்டிருக்கும் தியேட்டர்களில் பேனர்கள் அகற்றப்பட்டன.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள தியேட்டர் ஒன்றில் புகுந்து அ.தி.மு.க. தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால், பகல் காட்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. கோபியில் 2 தியேட்டர்களில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை விஜய் ரசிகர்களே தாமாக முன் வந்து அகற்றினர். இதைப்போல மேட்டூர் ரோடு, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களும் அகற்றப்பட்டன.

அ.தி.மு.க.வினர் தாக்குதல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள எஸ்.வி.ராம் தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர், அங்கிருந்த பேனர்களை கிழித்து விட்டு கலைந்து சென்றனர். சிறிது நேரத்தில் அங்கு சர்கார் படம் திரையிடப்பட்டதால் ஆத்திரமடைந்து திரும்ப வந்த அவர்கள், தியேட்டருக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தனர்.

அப்போது அங்குள்ள ஊழியர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தியேட்டர் மேலாளர் திருலோகசந்தர் மற்றும் நிர்வாகிகளை அ.தி.மு.க.வினர் தாக்கினர். மேலும் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டு இருந்தவர்களையும் மிரட்டி வெளியேற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டதை தொடர்ந்து காலைக்காட்சி உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதைப்போல புதுமஜீத் தெருவில் உள்ள சத்யா தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களையும் அ.தி.மு.க. வினர் கிழித்து எறிந்தனர்.

தியேட்டர்களுக்கு பாதுகாப்பு

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் காலைக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தஞ்சாவூரில் சில தியேட்டர்களிலும், நாகை மாவட்டத்தில் உள்ள 7 தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டன.

தேனி மாவட்டத்தில் சர்கார் படம் வெளியான 12 தியேட்டர்களிலும் நேற்று காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அங்கு அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதைப்போல திண்டுக்கல் மாவட்டத்திலும் சர்கார் படம் வெளியான 19 தியேட்டர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

காஞ்சீபுரத்தில் போராட்டம்

காஞ்சீபுரத்தில் சர்கார் திரைப்படம் வெளியான 2 தியேட்டர்கள் முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். எனவே 2 தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

படப்பையில் உள்ள கண்ணப்பா தியேட்டர் முன்பு குன்றத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எழிச்சூர் இ.வி.ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட பேனர்களை அ.தி.மு.க.வினர் அகற்றினர். இந்த போராட்டத்தால் அங்கும் பகல் காட்சி ரத்து செய்யப்பட்டதுடன், தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

Next Story