அந்தமான் கடல்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு


அந்தமான் கடல்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு
x
தினத்தந்தி 10 Nov 2018 12:00 AM GMT (Updated: 9 Nov 2018 10:32 PM GMT)

அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந்தேதி தொடங்கி பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் தான் அனேக இடங்களில் மழை பெய்கிறது.

இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்றும் (சனிக்கிழமை) மழை பெய்யும் என்றும், அந்தமான் கடல்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தாய்லாந்து, வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மலேசியா தீபகற்ப பகுதியில் நேற்று முன்தினம் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து வரும் 3 தினங்களில் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வலுப்பெறுகிறது.

வலுப்பெறும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது. புயல் மாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகிற 12-ந்தேதி சரியாக கணித்து சொல்ல முடியும். இது புயலாக மாறும் பட்சத்தில் தமிழகத்தில் ஓரளவுக்கு நல்ல மழை இருக்கும். கண்டிப்பாக மழை இருக்க வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், 10-ந்தேதி (இன்று) அந்தமான், தென்கிழக்கு கடல் பகுதிக்கும், 11-ந்தேதி (நாளை) வங்கக்கடல், வட அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், 12-ந்தேதி (நாளை மறுநாள்) மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு, மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், 13-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.

மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல், இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் (நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூரில்) கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்த வரையில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-

சீர்காழியில் 7 செ.மீ., நன்னிலத்தில் 5 செ.மீ., குடவாசலில் 4 செ.மீ., நீடாமங்கலம், மயிலாடுதுறை, சேத்தியாதோப்பு, சூரங்குடி, மரக் காணம், ராமேசுவரம், நாகப்பட்டினம், வலங்கைமான், சிதம்பரம், பரங்கிப்பேட்டையில் தலா 3 செ.மீ., காரைக்கால், திருவாரூர், பாபநாசம், தரங்கம்பாடி, பாம்பன், வேதாரண்யம், மணமேல்குடி, ஒட்டப்பிடாரம், ஸ்ரீமுஷ்ணம், நெய்வேலி, தொண்டி, திருத்துறைப்பூண்டி, திருவிடை மருதூர், ஸ்ரீவைகுண்டத்தில் தலா 2 செ.மீ. உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

Next Story