மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி கல்லூரி மாணவி பலி குரூப்-2 தேர்வு எழுதிவிட்டு காதலனுடன் சென்றபோது பரிதாபம்


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி கல்லூரி மாணவி பலி குரூப்-2 தேர்வு எழுதிவிட்டு காதலனுடன் சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 11 Nov 2018 9:30 PM GMT (Updated: 11 Nov 2018 9:30 PM GMT)

சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலியானார். குரூப்-2 தேர்வு எழுதிவிட்டு காதலனுடன் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பார்கவி (வயது 22). இவர், சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (24). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் பணியாற்றி வருகிறார்.

பார்கவியும், ராஜதுரையும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய இரு வீட்டு பெற்றோரும், பார்கவியின் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதனிடையே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு எழுதுவதற்காக நேற்று காலை பார்கவியை, ராஜதுரை தனது மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் பி.முட்லூர் அரசு கல்லூரிக்கு அழைத்து வந்தார். மதியம் 1 மணிக்கு தேர்வு முடிந்ததும் ராஜதுரை, பார்கவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சிதம்பரம் நோக்கி புறப்பட்டார்.

சிதம்பரம் வேணுகோபால்பிள்ளை தெருவில் சென்றபோது கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். அப்போது பஸ்சின் பின்சக்கரம் பார்கவியின் தலையில் ஏறி, இறங்கியது. இதில் தலைநசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜதுரை காயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பார்கவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ராஜதுரை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Next Story