கொருக்குப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் ஆய்வின்போது 14 கற்சிலைகள் சிக்கின


கொருக்குப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் ஆய்வின்போது 14 கற்சிலைகள் சிக்கின
x
தினத்தந்தி 12 Nov 2018 11:15 PM GMT (Updated: 12 Nov 2018 10:52 PM GMT)

கொருக்குப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் குறித்த ஆய்வு பணியின்போது தண்ணீர் தொட்டிக்குள் 14 கற்சிலைகள் சிக்கின.

பெரம்பூர்,

சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 47-வது வார்டு கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கற்பக விநாயகர் கோவில் தெருவில் இருந்த தண்ணீர் தொட்டியை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் கற்சிலைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக கொருக்குப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கொருக்குப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு 14 கற்சிலைகளும், 2 அடி உயரமுள்ள பித்தளை வேலும் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ரங்கநாதபுரத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பிரசித்தி பெற்ற நாகவள்ளி அம்மன் கோவில் இருந்து வந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தினர் அந்த கோவிலை இடித்து அகற்றினர். குடியிருப்பு கட்டியவுடன் புதிய கோவில் கட்டி தருவதாக அவர்கள் உறுதி அளித்ததாக தெரிகிறது.

இதனால் கோவிலில் இருந்த அம்மன், பெருமாள், முருகன், சிவலிங்கம், நந்தி உள்ளிட்ட 21 கற்சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டதும் தெரியவந்தது. இந்தநிலையில், தற்போது 14 சிலைகள் தான் கிடைத்துள்ளது. 7 சிலைகள் காணாமல் போனதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து 14 சிலைகள் மற்றும் பித்தளை வேல் ஆகியவற்றை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் வைத்துள்ளனர். காணாமல் போன 7 சிலைகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story