கஜா புயல் இரவு 11.30 மணிக்கு நாகை அருகே கரையை கடக்கிறது -சென்னை வானிலை மையம்
சென்னைக்கும் நாகைக்கும் இடையே 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் வேண்பாக்கம், திம்மாவரம், மாமண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆவடி, பட்டாபிராம் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூரில் கனமழை பெய்தது. அடையாறு, சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கனமழை பெய்தது.
கஜா புயல் எதிரொலியால் கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
கஜா புயல் பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
* காலை 9.30 நிலவரப்படி கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. -நாகைக்கு வடகிழக்கே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
* இன்று இரவு 11.30 மணியளவில் கடலூர் - பாம்பனுக்கு இடையே நாகைக்கு அருகே கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு
* காற்று பலமாக வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்படு உள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
* கஜா புயலின் வேகம் மணிக்கு 14 கிலோ மீட்டரில் இருந்து 23 கிலோ மீட்டராக அதிகரிப்பு
* புயல் கரையை கடக்கும் போது சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
* கஜா புயல் தீவிர புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது
* தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்
* 25 கி.மீ நீள் வட்ட அளவில் கஜா புயல் நாகையை நெருங்கி வருகிறது
Related Tags :
Next Story