கஜா புயல்: முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! மு.க.ஸ்டாலின் டூவிட்


கஜா புயல்: முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! மு.க.ஸ்டாலின் டூவிட்
x
தினத்தந்தி 16 Nov 2018 8:07 AM GMT (Updated: 16 Nov 2018 8:07 AM GMT)

புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

கஜா புயல் தொடர்பாக பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்தன. அதன்படி தாழ்வான, குடிசை பகுதிகளில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் புயல் கரையை கடக்கும் முன்பே நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும் தமிழகத்தின் பல மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு இதுவரை 15 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

அதி தீவிர புயலான கஜா காலை 6 மணிக்கு கரையை கடந்ததாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார். 

தற்போது கஜா, புயலாக திண்டுக்கல்லுக்கு அருகே மையம் கொண்டுள்ளது. புயலால் ஏராளமான மின்கம்பங்கள் சேதடைந்து விழுந்துள்ள. மரங்கள் அடியோடு சாய்ந்து கிடக்கின்றன. மழை நின்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!

கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்!

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story