புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2018 2:56 PM GMT (Updated: 19 Nov 2018 2:56 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னை,

வங்கக்கடலில் மையம் கொண்ட ‘கஜா’ புயல் தீவிரம் கொண்டு நகர்ந்தவாறே கடந்த 16-ந் தேதி அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது. அந்த புயல் புதுக்கோட்டை மாவட்டத்தையும் விட்டு வைக்காமல் புரட்டி போட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தும், உடைந்தும் விழுந்தன.

இதனால், கடந்த 3 நாட்களாக நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் மின்சாரம், குடிநீர் இன்றி பொது மக்கள் தவித்து வருகிறார்கள். குடிநீர் வினியோகம் என்பது அறவே இல்லாமல் போனது. 

காசு கொடுத்து அவற்றை வாங்கினாலும் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கேன் தண்ணீர் ரூ.200-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் டேங்கர் லாரிகளில் வினியோகிக்கப்படும் குடிநீரை பெற முண்டியடித்துக் கொண்டு காலிக்குடங்களுடன் நீண்ட வரிசையில் நின்றனர்.

மேலும் அத்தியாவசிய பொருட்களும் தாறுமாறாக விலை உயர்ந்து விட்டது.

புயல் நிவாரணக்குழுவுடன் இணைந்து மாவட்ட நிர்வாகமும் முனைப்புடன் அங்கு மீட்புப்பணிகள் மற்றும் சேதமான மின்கம்பங்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாலும் இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் 5 நாட்கள்வரை ஆகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story