சேலம், கோவை நகர கியாஸ் வினியோக திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி 22-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்


சேலம், கோவை நகர கியாஸ் வினியோக திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி 22-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்
x
தினத்தந்தி 19 Nov 2018 11:30 PM GMT (Updated: 19 Nov 2018 11:09 PM GMT)

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம், சேலம் மற்றும் கோவை நகர கியாஸ் வினியோக திட்டத்திற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கி உள்ளது.

சென்னை,

இந்த திட்டத்திற்கு வருகிற 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார் என்று இந்தியன் ஆயில் நிறுவன மாநிலத்தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சித்தார்த்தன் கூறியதாவது:-

இந்தியா முழுவதும், 129 மாவட்டங்களில் அமைந்துள்ள 65 புவியியல் பகுதிகளில், 9-வது ஏலச்சுற்றில் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் உரிமம் வழங்கப்பட்ட நகர எரிவாயு வினியோக திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகிற 22-ந்தேதி காணொலி காட்சி மூலம், டெல்லியில் இருந்து அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், தமிழ்நாட்டில் சேலம் மற்றும் கோவையில் இந்த திட்டங் களை செயல்படுத்த உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 10 மாவட்டங்களில் குழாய் மூலம் கியாஸ் வினியோகிக்கும் திட்டங்கள் 5 நிறுவனங்கள் மூலம் அமைக்கப்பட உள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோவை, கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சேலம், திருப்பூர் மாவட்டங்களில் இந்த திட்டங்கள் அமைக்கப்படும்.

அழுத்தமேற்றப்பட்ட கியாஸ் (அதிக அளவில் வாகன எரிபொருளாக பயன்படுத்தப்படுவது), குழாயில் செலுத்தப்படும் கியாஸ் (வீடுகளில் பயன்படுத்தப்படுவது), வர்த்தக ரீதியான மற்றும் தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கியாஸ் என 4 பிரிவுகளில், குழாய்கள் மூலம் கியாசை வினியோகிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நகர கியாஸ் ‘நெட்வொர்க்’குகளை விரிவுபடுத்தும் வகையில், இறக்குமதி செய்யப்பட்ட கியாசை விட மலிவான விலையில், வீடுகளுக்கான சமையல் கியாஸ் மற்றும் போக்குவரத்துக்கான கியாசின் முழுத்தேவையையும் இத்திட்டம் மூலமாக ஈடு செய்ய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story