மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு


மேகதாது அணை விவகாரம் தொடர்பாக  நாளை திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Nov 2018 6:17 AM GMT (Updated: 28 Nov 2018 6:17 AM GMT)

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கர்நாடக மாநிலம், ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் காவிரி ஆறு ஓடும் வழியில் மேகதாது என்னும் பகுதி உள்ளது. இங்கு, காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

கர்நாடகாவில் கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்பு, முதல்-மந்திரி குமாரசாமி மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார். இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் கர்நாடக அரசு சார்பில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு (பிசிபிலிட்டி ரிப்போர்ட்) அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டு அதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.இந்த திட்டத்தில் அணை அமைய உள்ள இடம், பரப்பளவு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இடம் பெற்று இருந்தன. குடிநீர் மற்றும் மின் உற்பத்தி தேவைக்காக இந்த அணை கட்டப்பட இருப்பதாக இந்த திட்டத்தில் கூறப்பட்டு இருந்தது.

மேலும், கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோரை குமாரசாமி நேரில் சந்தித்து பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.இந்த நிலையில் மேகதாதுவில் அணை திட்ட சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் திடீர் ஒப்புதல் அளித்து உள்ளது.

மேலும் இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படியும் கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறைக்கு மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டிய நீரில் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய நீர்வளத்துறை மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருப்பதற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story