கஜா புயலால் நாகை மாவட்டத்தில் 15 பேர் உயிரிழப்பு; முதல் அமைச்சர் பழனிசாமி


கஜா புயலால் நாகை மாவட்டத்தில் 15 பேர் உயிரிழப்பு; முதல் அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 28 Nov 2018 9:41 AM GMT (Updated: 28 Nov 2018 9:41 AM GMT)

கஜா புயலால் நாகை மாவட்டத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 16ந்தேதி ‘கஜா’ புயல் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி சென்றது.

இதனை தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக நாகைக்கு சென்றார்.

அவர் நாகை, வேதாரண்யத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.  அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கஜா புயலால் நாகை மாவட்டத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.  இதுவரை நாகை மாவட்டத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறினார்.

இங்குள்ள 415 முகாம்களில் 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.  21 ஆயிரம் கால்நடைகள் புயலில் சிக்கி உயிரிழந்துள்ளன.  புயலால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு பதிலாக 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும்.

தமிழகத்தின் பல்வேறு துறைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.  மருத்துவ குழுக்கள் தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றன.  சாய்ந்த மின் கம்பங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புயல் வரும்முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்தது.  இதனால் உயிரிழப்பு குறைந்தது.  5 நாட்களுக்குள் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என கூறினார்.

Next Story