‘பயங்கரவாதம் மனித குலத்துக்கு அச்சுறுத்தல்’ சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு


‘பயங்கரவாதம் மனித குலத்துக்கு அச்சுறுத்தல்’ சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 2 Dec 2018 11:30 PM GMT (Updated: 2 Dec 2018 7:49 PM GMT)

பயங்கரவாதம் மனிதகுலத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது என்று சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வெங்கையா நாயுடு பேசினார்.

சென்னை,

பகவான் மகாவீர் அறக்கட்டளை சார்பில் 21-வது ‘மகாவீர் விருதுகள்’ வழங்கும் விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பகவான் மகாவீர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பிரசன்சந்த் ஜெயின் வரவேற்புரையாற்றினார்.

விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கவுரவ விருந்தினராக கலந்துகொண்டு பகவான் மகாவீர் அறக்கட்டளையின் குறிப்புகள் மற்றும் விருதுகள் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெற்றுக்கொண்டார்.

அகிம்சை பிரிவில் சென்னையை சேர்ந்த ‘விலங்குகளுக்கான மனிதர்கள்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஷிரானிபெரைரா, மருத்துவ பிரிவில் தெலுங்கானாவை சேர்ந்த பகவான் மகாவீர் ஜெயின் மீட்பு அறக்கட்டளை தலைவர் பி.சி.பாரக், சமுதாயம் மற்றும் சமூக சேவை பிரிவில் மணிப்பூரை சேர்ந்த கிராமப்புற சுகாதார கழகம் என்ற அமைப்பின் நிறுவனர் இந்திரமணிசிங் ஆகியோருக்கு ‘மகாவீர்’ விருதுகளை வழங்கி வெங்கையா நாயுடு வழங்கினார்.

இதையடுத்து பகவான் மகாவீர் அறக்கட்டளை சார்பில் ‘கஜா’ புயலுக்கான நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெங்கை நாயுடு, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் வழங்கினார்.

விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

இந்தியா பல்லாண்டு கால பாரம்பரிய நாகரிகத்தை கொண்டது. நமது தொன்மையான நாகரிகம், அறிவுக்கும், ஞானத்திற்கும் ஊற்றுக் கண்ணாக திகழ்ந்தது. ஆயுர்வேதம் என்று மக்களால் அழைக்கப்பட்ட நம்முடைய பாரம்பரியமான மருத்துவமுறை பிறந்த இடம் இங்குதான். தொன்மையான இந்திய சமுதாயம் முற்போக்கானதாகவும், சமத்துவமானதாகவும் விளங்கியது. அந்த சமுதாயத்தில் பெண்கள் உயர்வாக மதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் அடிமை முறை இல்லை என்று, இங்கு பயணித்த கிரேக்க தத்துவஞானிகளும், வரலாற்று ஆசிரியர்களும் எழுதிவைத்திருக்கிறார்கள். உலகின் கலாசார தலைநகராக இந்தியா திகழ்ந்தது. அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், அறிவு, ஞானம் என்ற மனித குல மாண்புகளை தோற்றுவித்ததும், உலகிற்கே போதிக்கும் ஆசானாகவும் இந்தியா விளங்கியது. அன்பு, தியாகம், அகிம்சை, அமைதி என்ற அடிப்படைகளை அடித்தளமாக கொண்டிருந்த மதம் பிறந்த மண் இதுதான்.

உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை நாம் அறிவோம். பயங்கரவாதம் என்பது மனித குலத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது. இதற்கு மதம் கிடையாது. ஆனால் எதிர்பாராதவிதமாக பயங்கரவாத செயல்பாட்டில் மதத்தை இணைத்து அதை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

பயங்கரவாதம் மனிதனுக்கு பகைவன். அதற்கு மதம், சாதி கிடையாது. பயங்கரவாதத்தை ஆதரித்து நிதி கொடுப்பதையும், பயிற்சி கொடுப்பதையும் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த நேரத்தில் சமுதாயம், உலக நாடுகள் என நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பயங்கரவாதத்துக்கு வெகு விரைவில் முடிவு கட்டவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசும்போது, “ஆன்மிகம் என்ற களத்தில் நமது நாடு உலகத்துக்கே தலைவராக விளங்குகிறது. ஆன்மிக தூய்மை நிலையான நாகரிகத்துக்கு ஆதாரமாக விளங்குகிறது. பல்வேறு நூற்றாண்டுகளாக ஜைன மதம் தமிழோடு ஒன்றி, உறவாடி வருகிறது. சீவக சிந்தாமணி, வளையாபதி போன்ற காப்பியங்களில் தமிழ் இலக்கிய பாரம்பரியங்களை ஜெயின் மத துறவிகள் தான் எழுதியுள்ளனர்” என்றார்.

பகவான் மகாவீர் அறக்கட்டளையின் செயல்பாட்டு அறிக்கையை அதன் அறங்காவலர் பிரமோத் ஜெயின் வாசித்தார். நிறைவில் மற்றொரு அறங்காவலரான வினோத் குமார் நன்றியுரை நிகழ்த்தினார்.


Next Story