மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் தலைவர்கள் கடும் கண்டனம்; தீர்மானத்திற்கு ஆதரவு
தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை,
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.
சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அனைத்துக்கட்சி எம்எல்ஏ-க்கள் தலைமை செயலகம் வருகை தந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
மேகதாதுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி தந்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது.
தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்.
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்துள்ளார்.
மேகதாது அணை தொடர்பாக இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசு சட்டத்திற்கு புறம்பாக அணை கட்டுவது தவறு என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
காவிரிப்படுகையில் எந்த அணையும் கட்டக்கூடாது என்பது தான் எங்கள் வாதம் என ஓ. பன்னீர்ச் செல்வம் கூறினார்.
சட்டப்பேரவையில் துரைமுருகன் பேசும் போது, காவிரியில் கர்நாடக அரசு ஒரு அணை கட்டுகிறதா?, 2 அணை கட்டுகிறதா?. கர்நாடக அரசு நம்மை ஏமாற்ற பார்க்கிறார்கள். எந்த இடத்திலும் அணை கட்டக்கூடாது என வலியுறுத்த வேண்டும் என கூறினார்.
தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது குறித்து பேச சட்டப்பேரவை கூட்டியதற்கு நன்றி. கஜா புயலின் வடு ஆறுவதற்கு முன்பே மேகதாது அணை கட்ட அனுமதி அளித்தது வருத்தம் அளிக்கிறது. மேகதாது அணை கட்டுவது குறித்து முன்பே உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றிருக்க வேண்டும். 9 பேர் கொண்ட குழுவில் தமிழகம் சார்பில் யாரும் இல்லை. காவிரி பிரச்சினையை பொருத்தவரையில் தி.மு.க. முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. தமிழகத்தின் உயிர் பிரச்சினையான காவிரி பிரச்சினையில் மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறது.
தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடையும் வகையில் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என கூறினார்.
தொடர்ந்து கஜா புயல் பாதிப்பு குறித்து பேச மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் மறுத்து விட்டார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவர் கே.ஆர். ராமசாமி பேசும் போது, தமிழக விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மேகதாது அணையை தடுக்க சட்டரீதியாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியாது. எனவே கர்நாடகத்தில் லாபம் அடையலாம் என்ற எண்ணத்தில் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள் என கூறினார்.
தொடர்ந்து கடையநல்லூர் எம்.எல்.ஏ. அபுபக்கர், நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரி, தனியரசு எம்.எல் ஏ., டிடிவி தினகரன் எம்.எல் ஏ. ஆகியோரும் கண்டனம் தெரிவித்தும், தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பேசினார்கள்.
Related Tags :
Next Story