புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்றபோது அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு


புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்றபோது அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Dec 2018 9:30 PM GMT (Updated: 7 Dec 2018 8:25 PM GMT)

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் ஒரு வாலிபர் பாயும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை கடந்த மாதம் 18-ந்தேதி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட சென்றபோது அவரது காரை சிலர் வழிமறித்து அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி மனோகரன்(வயது 53), கவியரசன்(30), ராமச்சந்திரன்(30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். நேற்று வீரசேகரன்(30), அவரது தம்பி பன்னீர்செல்வம்(29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் சென்ற காரை சிலர் வழிமறித்து தாக்குவதும், அமைச்சரின் காரை நோக்கி ஒரு வாலிபர் அரிவாளால் வெட்ட பாய்ந்து செல்வது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது.

அந்த சமயத்தில் அமைச்சரின் கார் வேகமாக பின்னோக்கி சென்றதால், அவர்கள் அமைச்சர் காருடன் வந்த மற்றொரு காரை அடித்து நொறுக்குவது போலவும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ காட்சி தற்போது நாகை மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story