24 மணி நேரத்துக்கு ஐகோர்ட்டில் அனைத்து வாசல்களும் இழுத்து மூடப்பட்டன


24 மணி நேரத்துக்கு ஐகோர்ட்டில் அனைத்து வாசல்களும் இழுத்து மூடப்பட்டன
x
தினத்தந்தி 8 Dec 2018 9:45 PM GMT (Updated: 8 Dec 2018 8:12 PM GMT)

சென்னை ஐகோர்ட்டில் நுழைவுவாயில்கள் அனைத்தும் நேற்று இரவு 8 மணிக்கு இழுத்து மூடப்பட்டன.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் 5 நுழைவுவாயில்கள் உள்ளன. இந்த நுழைவுவாயில்கள் அனைத்தும் நேற்று இரவு 8 மணிக்கு இழுத்து மூடப்பட்டன. நேற்று இரவு 8 மணி முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி வரை நுழைவுவாயில்கள் திறக்கப்படாது. பொதுவாக ஒரு இடத்தை பொதுமக்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பயன்படுத்தி வந்தால் அது பொது சொத்தாகி விடும். ஐகோர்ட்டை இதுபோல யாரும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதால், ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒருநாளில் (24 மணி நேரத்துக்கு) ஐகோர்ட்டின் அனைத்து நுழைவுவாயில்களும் இழுத்து மூடப்படும்.

அதன்படி நேற்று இரவு ஐகோர்ட்டின் அனைத்து நுழைவுவாயில்களும் இழுத்து மூடப்பட்டன. இந்த நடைமுறைக்கு பல கதைகள் சொல்லப்படுகின்றன. தற்போது ஐகோர்ட்டு அமைந்திருக்கும் இடத்தில் சென்ன கேசவப்பெருமாள் கோவில் முன்பு இருந்ததாகவும், இந்த இடம் அந்த கோவிலுக்கு சொந்தமானது என்பதால், ஆண்டுக்கு ஒருமுறை ஐகோர்ட்டின் நுழைவுவாயில்கள் மூடப்பட்டும் அதன் சாவி கோவில் நிர்வாகத்துக்கு ஒப்படைக்கப்படுகிறது என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

இன்னொரு தரப்பிலோ இந்த இடம் ஆற்காடு நவாப்புக்கு சொந்தமானது என்றும், ஐகோர்ட்டின் நுழைவுவாயில்கள் இழுத்து மூடப்பட்டிருக்கும்போது நவாப்பின் பிரதிநிதிகள் இரவில் வந்து பார்வையிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஐகோர்ட்டின் பதிவுத்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ‘அப்படி எதுவும் இல்லை’ என்று கூறி மறுக்கின்றனர்.

Next Story