தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 அதிகரித்தது


தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 அதிகரித்தது
x
தினத்தந்தி 8 Dec 2018 11:30 PM GMT (Updated: 8 Dec 2018 8:52 PM GMT)

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதத்தில் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

கடந்த 2-ந் தேதி ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 905 என்ற நிலையில் இருந்தது. அதன்பின்னர், ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து கொண்டே வந்தது. நேற்றும் விலை அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்தை தாண்டியது.

ஒரே நாளில் ரூ.360 அதிகரித்தது

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 965-க்கும், ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆன தங்கம், நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 45-ம், பவுனுக்கு ரூ.360-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 10-க்கும், ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105-ம் பவுனுக்கு ரூ.840-ம் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்து இருந்தது.

வெள்ளி நேற்று முன்தினம் ஒரு கிராம் 39 ரூபாய் 70 காசுக்கும், ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 700-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராமுக்கு 60 காசும், கிலோவுக்கு ரூ.600-ம் உயர்ந்து, ஒரு கிராம் 40 ரூபாய் 30 காசுக்கும், ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 300-க்கும் விற்பனை ஆனது.

காரணம் என்ன?

தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து விலை அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து, சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:-

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்தில் எண்ணெய் உற்பத்தியை குறைக்க அமெரிக்கா நிர்ப்பந்தப்படுத்தி இருக்கிறது. அப்படி குறைக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அமெரிக்க டாலரை கொடுத்து இந்தியா எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வரும். அப்படி வந்தால் இந்திய ரூபாய் மதிப்பு சரியும்.

மேலும், அமெரிக்க உற்பத்திக்கான குறியீடு சரிந்துள்ளது. இதனால் பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கி இருக்கின்றனர். இந்த காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து இருக்கிறது. இது மேலும் விலை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story