மேகதாது விவகாரத்தில் கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சருக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம்


மேகதாது விவகாரத்தில் கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சருக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம்
x
தினத்தந்தி 10 Dec 2018 7:54 AM GMT (Updated: 10 Dec 2018 7:54 AM GMT)

மேகதாது விவகாரத்தில் கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சருக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாது என்ற இடம் உள்ளது. “ஆடு தாண்டும் காவிரி” என்று குறிப்பிடும் அளவுக்கு இங்கு காவிரி ஆறு குறுகி ஓடுகிறது. இந்த இடம் கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு முதல் கட்ட அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த அணை திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி தமிழக முதல்-அமைச்சருக்கு  கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதி இருந்தார். இதற்கு  பதில் அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறி இருந்தார்.

இந்த நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கர்நாடக  நீர்ப்பாசனத்துறை மந்திரி சிவக்குமாருக்கு பதில்  கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அதில்,

காவிரி விவகாரத்தில்  உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும்.  மேகதாது திட்டத்திற்கு நீர்வள ஆணையத்திடம் அனுமதி வாங்கியது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய செயலாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பை  கர்நாடகம் மீறி உள்ளதால்  பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. தமிழக அரசின் ஒப்புதலின்றி காவிரி படுகையில் எந்த அணையும் கட்டக்கூடாது என அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story