காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ
திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை எனவும் காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை
சென்னை அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினர்.இரு கட்சிகள் இடையே மனக்கசப்பு நிலவுவதாக கூறப்பட்ட சூழலில், வைகோ-திருமாவளவன் சந்திப்பு நடந்து உள்ளது. பின்னர் இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது திருமாவளவன் கூறும் போது
வைகோவிடம் 30 ஆண்டுகாலமாக நட்போடு இருக்கிறேன். வைகோ நல்ல மனிதர், நினைத்ததை ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர்.
நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என கூறினார்.
வைகோ கூறியதாவது:-
நரேந்திர மோடி அரசுக்கு எதிராக ஒரு அலை வீசுகிறது. 2019 ல் மாநில அரசின் கூட்டமைப்புகளும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்க போகிறது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் அணைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றிவிட மோடி அரசு துடிக்கிறது.அவ்வாறு நிறைவேற்றிவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு தமிழகத்திற்குத்தான். இந்துத்துவா கூட்டம் உள்ளே நுழைய முடியவில்லை என்ற வெறுப்பில் இதையெல்லாம் செய்கிறார்கள். திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது.
மோடி அரசுக்கு எதிராக ஒரு அலை வீசுகிறது. 5 மாநில தேர்தல் முடிவு மூலம் மதச்சார்பின்மை, ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எழுகிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story