15, 16-ந்தேதிகளில் மிதமான மழை பெய்யும் -சென்னை வானிலை மையம்


15, 16-ந்தேதிகளில் மிதமான மழை பெய்யும் -சென்னை வானிலை மையம்
x
தினத்தந்தி 12 Dec 2018 8:29 AM GMT (Updated: 12 Dec 2018 8:29 AM GMT)

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக 15, 16-ந்தேதிகளில் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி இந்தியப் பெருங்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்தமாகவும் 15-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவும் (புயல் சின்னம்) மாறி தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகம் நோக்கி நகரும்.

இதன் காரணமாக 15, 16-ந் தேதிகளில் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யும்.

மீனவர்கள் இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், நாளை (13-ந்தேதி) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும், 15-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story