தஞ்சை பெரிய கோவிலில் யார் பஜனை நடத்த அனுமதி கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா? -ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி


தஞ்சை பெரிய கோவிலில் யார் பஜனை நடத்த அனுமதி கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா? -ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
x
தினத்தந்தி 13 Dec 2018 8:28 AM GMT (Updated: 13 Dec 2018 8:28 AM GMT)

தஞ்சை பெரிய கோவிலில் யார் பஜனை நடத்த அனுமதி கேட்டாலும் கொடுத்து விடுவீர்களா? என்று ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை

தஞ்சை பெரிய கோவிலில், வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் தியான நிகழ்ச்சி தொடங்குவதாக இருந்தது. இதற்கு கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர் தரப்பில் அவரது வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன், ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் யுனெஸ்கோவால் சோழர்களின் சிறப்பான கோயில் என்ற சிறப்பைப் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், இதுபோன்ற தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது கோவிலின் சிறப்பைப் பாதுகாக்கத் தவறும் நடவடிக்கை.

நிகழ்ச்சியை நடத்தும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், 2017- ஆம் ஆண்டு யமுனை நதிக்கரையில் மாசு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தியதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர். ஆகவே, தஞ்சை பெரிய கோவிலில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இதையடுத்து அந்நிகழ்ச்சிக்கு தடை விதித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மத்திய தொல்லியல்துறை அதிகாரி 13-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதில் நிச்சயம்  உள்நோக்கம் இருக்கிறது. நிகழ்ச்சியை தஞ்சை பெரிய கோவிலில் நடத்த வேண்டும் என்று மக்கள் ஆசைப்பட்டனர். இந்து கோவிலில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் தியானம் செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்லியல் துறை சார்பில், கோவில் நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று பெரிய கோவிலில் பஜனை நடத்த அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்படியென்றால் தஞ்சை பெரிய கோவிலில் யார் பஜனை நடத்த அனுமதி கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா? தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது அறநிலையத்துறை பரிந்துரைத்ததால் மட்டும் எப்படி அனுமதி வழங்கினீர்கள்?

நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தின் முழு வரைப்படத்தை பெற்ற பின்பு தான் அனுமதி வழங்கப்பட்டதா? என்று கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், இது ஏற்க தக்கதல்ல, தஞ்சை பெரிய கோவில் பாரம்பரியமானது என்பதால் நீதிமன்றம் தலையிடுகிறது என்று கூறியது. பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

Next Story