மாதவரம் பால்பண்ணையில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்


மாதவரம் பால்பண்ணையில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்
x
தினத்தந்தி 14 Dec 2018 10:37 PM GMT (Updated: 14 Dec 2018 10:37 PM GMT)

மாதவரம் பால்பண்ணையில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீஸ் நிலையத்தில் தந்தை புகார் செய்தார்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணையில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் செண்பகதேவி (வயது 18). கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வடக்குபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் மாணவி செண்பகதேவி கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் இருந்தார். அவருடன் படிக்கும் சக மாணவிகள் மதியம் விடுதிக்கு வந்தபோது, விடுதி அறையில் செண்பக தேவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாதவரம் பால்பண்ணை போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் செண்பகதேவியின் தந்தை முத்துகிருஷ்ணன், தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.

அதில், “கல்லூரி விடுதி காப்பாளரும், கல்லூரி நிர்வாகத்தினரும் எனது மகளை தரக்குறைவாக பேசி வருவது குறித்து எனது மகள் செல்போனில் எனக்கு தகவல் கொடுத்தாள். எனவே என்னுடைய மகள் தானாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை. எனது மகள் சாவில் மர்மம் உள்ளது” என கூறி இருந்தார்.

அதன்பேரில் மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story