பூட்டிய வீட்டில் 2 பேர் பிணமாக கிடந்த விவகாரம்: காதலை கைவிடாத மகளை கொன்று தாய் தற்கொலை செய்தது அம்பலம்


பூட்டிய வீட்டில் 2 பேர் பிணமாக கிடந்த விவகாரம்: காதலை கைவிடாத மகளை கொன்று தாய் தற்கொலை செய்தது அம்பலம்
x
தினத்தந்தி 15 Dec 2018 9:30 PM GMT (Updated: 15 Dec 2018 6:38 PM GMT)

விருதுநகர் அருகே பூட்டிய வீட்டுக்குள் 2 பேர் பிணமாக கிடந்த விவகாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. காதலை கைவிடாத மகளை கொன்று தாய் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் ராஜாக்கனி. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ஜென்சிமேரி (வயது 37). இவர்களுக்கு 4 மகள்கள். இந்த தம்பதியின் மூத்த மகள் அபிநயா (17). பிளஸ்-2 படித்து வந்தார்.

ராஜாக்கனி மதுரையில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு நேற்று முன்தினம் சென்று இருந்தார். மாலையில் அவரது மற்றொரு மகள் கவுசல்யா, பள்ளி சென்றுவிட்டு திரும்பியபோது வீடு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கவுசல்யா, பக்கத்து வீட்டை சேர்ந்தவரின் செல்போனில் இருந்து தந்தைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஊர்திரும்பிய ராஜாக்கனி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது ஜென்சிமேரி தூக்கில் பிணமாக தொங்குவதையும், அபிநயா கீழே இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த பரபரப்பு தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

அபிநயா, ஒரு வாலிபரை காதலித்ததால் அவரை பெற்றோர் கண்டித்தனர். ஆனால், அபிநயா காதலில் உறுதியாக இருந்துள்ளார். இந்நிலையில் ராஜாக்கனி மதுரை சென்றுவிட, மற்ற 3 பெண் குழந்தைகளும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். ஜென்சிமேரி, அபிநயா மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது ஜென்சிமேரி மகளுக்கு அறிவுரை கூறினார். ஆனால், அதை அபிநயா கேட்காமல் கட்டிலில் போய் படுத்து கொண்டார். இதனால் ஜென்சிமேரி கடும் ஆத்திரம் அடைந்து கயிற்றால் மகளின் கழுத்தை இறுக்கியதாக தெரிகிறது. இதனால் மூச்சுத்திணறி அபிநயா இறந்தார். பின்னர் தூக்குப்போட்டு ஜென்சிமேரியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.

காதலை கைவிடாத மகளை, தாயே கொன்று தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story