அ.ம.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய முடிவா? பிரபு எம்.எல்.ஏ.பேட்டி


அ.ம.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய முடிவா? பிரபு எம்.எல்.ஏ.பேட்டி
x
தினத்தந்தி 17 Dec 2018 10:00 PM GMT (Updated: 17 Dec 2018 8:21 PM GMT)

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய முடிவா? என்பது குறித்து பிரபு எம்.எல்.ஏ. கூறினார்.

விழுப்புரம் , 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபு. இவர் கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். இதையடுத்து அவர் அ.ம.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளராக இருந்து வருகிறார். இவர் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. தொடர்ந்து எம்.எல்.ஏ. ஆக உள்ளார்.

இந்த நிலையில் அ.ம.மு.க.வில் இருந்து விலகி, செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்ததை போல், பிரபு எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இணையப்போவதாக சமூக வலைதளங்களிலும், கட்சியினர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பிரபு எம்.எல்.ஏ. ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக நான் அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். நான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உண்மையான விசுவாசியாகவும், தொண்டனாகவும் செயலாற்றுவதுதான் எனது கடமை. அணி மாறப்போவதாக வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.

அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளராக சசிகலா, துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் எப்போது ஆகிறார்களோ அப்போது தான் அ.தி.மு.க.வும்- அ.ம.மு.க.வும் இணையும்.

ஜெயலலிதாவின் எண்ணம் ஈடேற வேண்டும் என்றால் இந்த ஆட்சியும், கட்சியும் சசிகலாவிடம் வந்தால் தான் முடியும். அதுவரை நான் அயராது உழைத்து இந்த இயக்கத்தை வலுப்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story