ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
புதுடெல்லி,
தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.
தொடர்ந்து பதற்றம் நீடித்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஆலையை மூட அரசாணை வெளியானது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் ஆலையை திறக்கலாம் என்றும் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் அறிக்கை அளித்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்தில் திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தினமும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக அரசின் மனுவை விசாரிக்க தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என்று மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த மேல் முறையீட்டு மனுக்கள் இந்த வாரம் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
Related Tags :
Next Story