கோர்ட்டில் எனக்கு நீதி கிடைக்கும் செய்யாத தவறுக்கு தண்டனையா? விஷால் ஆவேச பேட்டி


கோர்ட்டில் எனக்கு நீதி கிடைக்கும் செய்யாத தவறுக்கு தண்டனையா? விஷால் ஆவேச பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2018 12:00 AM GMT (Updated: 20 Dec 2018 6:48 PM GMT)

கோர்ட்டில் எனக்கு நீதி கிடைக்கும் என்றும், செய்யாத தவறுக்கு தண்டனையா? என்றும் நடிகர் விஷால் தெரிவித்தார்.

சென்னை, 

தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டை உடைக்க முயற்சித்ததாக நடிகர் விஷால் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை கோர்ட்டுக்கு போய் முறையாக முறையிடுவேன். கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு இடையூறு வரும் போது கோர்ட்டுக்கு செல்கையில் நீதி கிடைத்தது. இதிலும் கிடைக்கும்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சிறு, நலிந்த தயாரிப்பாளர்களுக்காக தான் வேலை செய்து கொண்டு இருக்கிறது. அதை தொடர்ந்து செய்வோம். இளையராஜாவின் 75-வது ஆண்டை கவுரவப்படுத்தும் வகையில் பெரிய விழா பிப்ரவரியில் நடத்த போகிறோம். என்ன தடை வந்தாலும் அதை மீறி நடத்துவோம். அதில் வரும் நிதியை வைத்து சிறு, நலிந்த தயாரிப்பாளர்களுக்கு அரை கிரவுண்டு நிலம் கண்டிப்பாக கொடுப்போம். சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அது நடக்கக்கூடாது என்பதற்காக உறுப்பினராக இல்லாதவர்கள் எங்களை தடுக்கிறார்கள். இதனால் நாங்கள் ஓயமாட்டோம். இதில் சாதிப்போம்.

பொதுக்குழு கூட்டத்தை சரியான தேதியில் நடத்துவோம். முறைகேடுகள் நடப்பதாக சொல்கிறார்கள். கணக்கு கள் கேட்க வேண்டும் என்றால் அதற்கு முறை இருக்கிறது. ஒவ்வொரு மாதம் இ.சி. மீட்டிங்கில் கணக்கு காட்டப்படும். முறையாக கேட்டால் கொடுப்போம். முறை தெரியாமல் முறைகேடு நடப்பதாக சொல்கிறார்கள்.

செய்யாத குற்றத்துக்கு எங்களை 145-வது பிரிவின் கீழ் கைது செய்து இருக்கிறார்கள். செய்யாத தவறுக்கு தண்டனையா? நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் கோர்ட்டுக்கு சென்று நியாயம் வர வைப்பேன். ஜே.கே.ரித்தீஷ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினரே கிடையாது. பூட்டு போட்ட கிஷோர் என்பவரும் உறுப்பினர் இல்லை. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உறுப்பினராக இருக்கும் நாங்கள் பூட்டை திறந்ததற்கு கைது செய்து இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் காசு கொடுக்கும் முதலாளி. 60 வயதுக்கு மேல் உள்ள சிறு, குறு தயாரிப்பாளர்களுக்கு மாதம் பென்ஷன் ரூ.12,500 கொடுக்கிறோம். 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்குகிறோம். மருத்துவ உதவி, கல்வி உதவி, இன்சூரன்ஸ், தீபாவளி, பொங்கல் போனஸ் என அவர்களுக்கு வழங்கி இருக்கிறோம்.

நல்லது செய்வதற்கு பெயர் முறைகேடு என்றால், அதை நான் ஏற்கிறேன். அலுவலகத்துக்கு செல்ல அனுமதி இல்லை என்கிறார்கள். நாங்கள் என்ன ரவுடியா?. நாங்கள் தயாரிப்பாளர்கள். சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த நோட்டீசும் வழங்காமல் பூட்டி இருக்கிறார்கள்.

எங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள். நல்லது நடக்கக்கூடாது என்று நினைப்பவர்கள் அனைவரும் அவர்களுக்கு பின்னால் தான் இருக்கிறார்கள். நான் தொடர்ந்து நல்லது செய்து கொண்டே இருப்பேன். நல்லது செய்வதற்கு தடை வந்தாலும் அதை தாண்டி நல்லது செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story