ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக லண்டன் மருத்துவர் பீலேவுக்கு ஆணையம் சம்மன்
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக லண்டன் மருத்துவர் பீலேவுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை
ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என இதுவரை 142 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. அவர்களின் வாக்குமூலத்தையும் ஆணையம் பதிவு செய்துள்ளது.
சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வக்கீல் மூலம் தாக்கல் செய்துள்ளார். இதுவரை வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தி முடித்துள்ளார். தற்போது விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்காக ஆஜராக ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராக வில்லை. அதுபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோருக்கும் ஆணையம் சம்மன் அனுப்பியது. இதில் பொன்னையன் ஆஜராகி உள்ளார். விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் லண்டன் மருத்துவர் ரிச்சட் பீலே, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
ரிச்சர்ட் பீலே ஜனவரி 9-ந்தேதியும், தம்பித்துரை 11-ம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. காணொலி காட்சி மூலம் ரிச்சட் பீலேவிடம் விசாரணை நடத்துகிறது ஆறுமுகசாமி ஆணையம்.
Related Tags :
Next Story