சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை


சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 28 Dec 2018 11:41 AM GMT (Updated: 28 Dec 2018 1:05 PM GMT)

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

கடந்த 2006 முதல் முதல் 2011ஆம் ஆண்டு வரை பெரம்பலூர் எம்எல்ஏவாக இருந்தவர் ராஜ்குமார். கேரள மாநிலம் இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வறுமை காரணமாக தனது 15 வயது மகளை ராஜ்குமார் வீட்டுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேலைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

ஒரு சில நாட்களில் தனது தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த சிறுமி, தன்னால் இங்கு இருக்க முடியவில்லை என்றும், உடனே அழைத்து செல்லும்படியும் கூறியுள்ளார். மகளை அழைத்துச் செல்வதற்காக சிறுமியின் பெற்றோர் கேரளாவில் இருந்து புறப்பட்டு பெரம்பலூருக்கு வந்துள்ளனர். சிறுமி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக, ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சென்று பார்த்தபோது சிறுமி சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். சிறுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு அதனால் உயிரிழந்தது, பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகிய 7 பேர் மீது ஆள்கடத்தல், பாலியல் வன்முறை, மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பன்னீர்செல்வம் இறந்து போனார்.

ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி இன்று தீர்ப்பளித்தார்.

பாலியல் வன்முறை, மரணத்திற்கு காரணமாக இருத்தல், கூட்டுச் சதி ஆகிய மூன்று பிரிவுகளில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி, இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். கூட்டுச் சதி, மோசடி ஆகிய பிரிவுகளில், ராஜ்குமாரின் கூட்டாளி ஜெய்சங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி, இருவருக்கும் 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் மற்றவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story