பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி


பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 31 Dec 2018 8:27 AM GMT (Updated: 31 Dec 2018 8:27 AM GMT)

பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறி உள்ளார்.

சென்னை,

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட தலைமை தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது.

தேர்தல் நெருங்கி விட்டதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை பெரும்பாலான மாநில கட்சிகள் கூட்டணியை மாற்றி உள்ளன.

பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்த பல கட்சிகள் இந்த தடவை இடம்மாறி உள்ளன. அதுபோல காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு பல புதிய கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.

இதற்கிடையே பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. உத்தரபிரதேசம், மேற்குவங்கம், தெலுங்கானா, ஒடிசா உள்பட சில மாநில கட்சிகளின் தலைவர்கள் மூன்றாவது அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது அணி உருவானால் அது பல மாநிலங்களில் காங்கிரஸ், பா.ஜ.க. அணிகளுக்கு கிடைக்கும் வாக்குகளை கணிசமாக பிரிக்கும். இதனால் வாக்குகள் சிதறும். இது காங்கிரசுக்கு சாதகமாக இருக்குமா அல்லது பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருக்குமா என்பது கணிக்க முடியாதபடி உள்ளது.

இதன் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் அமைய உள்ள கூட்டணி உடன்பாடுகள் பா.ஜ.க., காங்கிரஸ் இருகட்சிகளுக்கும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு பா.ஜ.க. தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டை பொருத்தவரை பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுக்குமே தனி செல்வாக்கு இல்லை. எனவே அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் உருவாகும் கூட்டணியே பிரதானமாக உள்ளது. அந்த வகையில் தி.மு.க. தலைமையில் கூட்டணி தயாராகி விட்டது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் உறுதியாக உள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த கூட்டணியில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. அந்த கூட்டணியில் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. இடம் பெறும் என்று கடந்த சில மாதங்களாக பேச்சு நிலவுகிறது.

சமீபத்தில் அ.தி.மு.க. மந்திரிகள் தங்கமணி, வேலுமணி இருவரும் டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்தித்த போது கூட்டணி தொடர்பாகவும் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியானது. பா.ஜ.க. 12 தொகுதிகளை கேட்டதாகவும், அதில் பெரும்பாலான எம்.பி. தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் உள்ளதால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அதிர்ச்சியிலும், தயக்கத்திலும் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க.வை சேர்ப்பதற்கு அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தற்போதைய அ.தி.மு.க. எம்.பி.க்களில் சுமார் 10 பேர் பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு அவர்கள் ஒரு காரணத்தையும் கூறி வருகிறார்கள்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு வி‌ஷயங்களில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்த்தால் அது பா.ஜ.க.வை மட்டுமின்றி அ.தி.மு.க.வையும் சேர்த்து பாதித்து விடும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் சொல்கிறார்கள்.

அ.தி.மு.க. எம்.பி.க்களின் இந்த கருத்தை சில அ.தி.மு.க. மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் ஆதரித்துள்ளனர். எனவே பா.ஜ.க.வுடன் கூட்டணி பற்றி பேசி முடிவு செய்யும் முன்பு தங்களுடன் கலந்து பேச வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமைக்கு பெரும்பாலான எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க. எம்.பி.க்களில் 6 அல்லது 8 எம்.பி.க்கள்தான் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக தெரிகிறது. இதை கண்டுகொள்ளாத பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் கணிசமானவர்கள் பா.ஜ.க. கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் இடம் பெற செய்ய வேண்டும் என்று 99 சதவீத அ.தி.மு.க. நிர்வாகிகள் வலியுறுத்தியபடி உள்ளனர்.

வட மாவட்டங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் சக்தி வாய்ந்த கட்சியான பா.ம.க., நிச்சயமாக கூட்டணி சேரும் முடிவில்தான் இருக்கிறது. தி.மு.க.வில் ஏற்கனவே நிறைய கட்சிகள் சேர்ந்துவிட்டதால் பா.ம.க. அங்கு செல்ல வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தே.மு.தி.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் தி.மு.க.வில் த.மா.கா.வுக்கு இடம் இல்லை என்று கூறப்பட்டு விட்டதாம். காங்கிரசின் எதிர்ப்பு காரணமாக த.மா.கா.வை தி.மு.க.வினர் கழற்றி விட்டுவிட்டனர்.

எனவே த.மா.கா.வும் அ.தி.மு.க. கூட்டணி பக்கம் வந்து விடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய சூழ்நிலைகள் உருவாகும் பட்சத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள் இடம் பெறும் என்று கருதப்படுகிறது.

இது அ.தி.மு.க.வை மெகா கூட்டணியாக மாறச்செய்யும். ரஜினியின் ஆதரவும் இந்த கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. இதனால் தி.மு.க., அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிகள் சமபலத்துடன் மோதும் பரபரப்பான நிலை உருவாகும்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:-

பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை . ஸ்டாலின் ஏற்கனவே மக்களை தேடிச் சென்ற நிகழ்ச்சிகள் தோல்வி அடைந்ததைப்போல, கிராம சபை கூட்டமும் தோல்வி அடையும் என கூறி உள்ளார்.

Next Story