கட்சி பணத்தை செலவிட்டால் கேட்க மாட்டோம், அரசு பணத்தை செலவிடுகிறீர்கள் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
கட்சி பணத்தை செலவிட்டால் கேட்க மாட்டோம், அரசு பணத்தை செலவிடுகிறீர்கள் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க தடை விதித்துள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்க தடை விதிக்கப்படுவதாகவும் பிற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தடையில்லை எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. கட்சி பணத்தை செலவிட்டால் கேட்க மாட்டோம், அரசு பணத்தை செலவிடுகிறீர்கள். எந்த நோக்கத்துக்காக ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது" - சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், சென்னை ரேஷன் கடைகளில் தொடர்ந்து விநியோகம் செய்யப்படுகிறது. ரூ.1000 பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களை வாங்க ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. உத்தரவு பற்றி தகவல் வரவில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story