குட்கா முறைகேடு: ஐகோர்ட்டில் தலைமைச் செயலாளர் தவறான தகவலை தெரிவித்தாரா? ஆவணங்களை தாக்கல் செய்ய வருமானவரித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு


குட்கா முறைகேடு: ஐகோர்ட்டில் தலைமைச் செயலாளர் தவறான தகவலை தெரிவித்தாரா? ஆவணங்களை தாக்கல் செய்ய வருமானவரித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:00 PM GMT (Updated: 10 Jan 2019 7:04 PM GMT)

குட்கா முறைகேடு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தலைமைச் செயலாளர் தவறான தகவலை அளித்ததாகவும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி வருமானவரித்துறைக்கு நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

மதுரை, 

குட்கா முறைகேடு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தலைமைச் செயலாளர் தவறான தகவலை அளித்ததாகவும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி வருமானவரித்துறைக்கு நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

குட்கா முறைகேடு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டில் வருமானவரித்துறையினர் சென்னையில் சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோத குட்கா விற்பனைக்காக உயர் அதிகாரிகள், ஆளுங்கட்சியினருக்கு லஞ்சமாக பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின.

இதுகுறித்து அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், டி.ஜி.பி. அசோக்குமார் ஆகியோரிடம் வருமானவரித்துறை முதன்மை ஆணையர் ஒரு கடிதம் அளித்தார். அதில், குட்கா முறைகேட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருந்தார்.

இந்தநிலையில் குட்கா முறைகேட்டை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி, 2017-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் நான் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு விசாரணையின்போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘குட்கா முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான எந்த ஆவணமும் அரசு அலுவலகங்களில் இல்லை’ என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சசிகலா அறையில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, குட்கா முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறை முதன்மை ஆணையர் அளித்த கடிதம் உள்ளிட்ட சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் தலைமைச் செயலாளர், குட்கா முறைகேடு தொடர்பான கடிதம் இல்லை என்று தவறான தகவலை கோர்ட்டில் தெரிவித்துள்ளார். எனவே இதற்காக தலைமைச் செயலாளர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், குட்கா முறைகேடு தொடர்பான கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை கோர்ட் டில் தாக்கல் செய்ய வருமானவரித்துறை முதன்மை இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story