ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் ரூ.4.71 கோடி பறிமுதல் ஐகோர்ட்டில், வருமான வரித்துறை பதில் மனு


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் ரூ.4.71 கோடி பறிமுதல் ஐகோர்ட்டில், வருமான வரித்துறை பதில் மனு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:15 PM GMT (Updated: 10 Jan 2019 7:24 PM GMT)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்பட பலரது வீடுகளில் இருந்து ரூ.4.71 கோடி பறிமுதல் செய்ததாக ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை, 

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் செயல் பட்டனர். இவர்கள், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வாரி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான ஆதார ஆவணங்கள் ஏராளமாக சிக்கின. இதுகுறித்து வருமான வரித்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கியது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த புகாரின் அடிப்படையில், அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அதில் யாருடைய பெயரும் குறிப்பிடவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வருமான வரித்துறையை பதில் மனு தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறையின் முதன்மை தலைமை ஆணையர் பி.முரளிகுமார் பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-

சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும், பிறருடைய வீடுகளிலும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்ததற்காக ஆதார ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.4.71 கோடி கீழ்கண்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் ரூ.3 லட்சமும், ஜெ.சீனிவாசனிடம் ரூ.3 லட்சமும், கல்பேஷ் எஸ்.ஷாவிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சமும், சாதிக் பாட்ஷாவிடம் இருந்து 6 லட்சமும், கார்த்திகேயனிடம் இருந்து ரூ.8 லட்சமும், ஆர்.சரத்குமாரிடம் இருந்து ரூ.11 லட்சமும், ஆர்.சின்னத்தம்பியிடம் இருந்து ரூ.20 லட்சமும், டாக்டர் செந்தில்குமாரிடம் இருந்து ரூ.15 லட்சமும், நயினார் முகமதுவிடம் இருந்து ரூ.2 கோடியே 95 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு, பறிமுதல் செய்யப்பட்ட ஆதார ஆவணங்கள் குறித்த விவரங்களை 2017-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை வருமான வரித்துறை வெளியிடவில்லை. ஆனால், வருமான வரித்துறையின் தகவல்களை வெளியிட்டதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மை அல்ல. அனைத்து விவரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பணம் பறிமுதல் உள்ளிட்டவைகளுக்காக சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து வருமானவரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் சீனிவாஸ், ஒரு ரகசிய அறிக்கையை நீதிபதிகளிடம் கொடுத்தார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘அந்த ரகசிய அறிக்கையின் நகலை தங்கள் தரப்புக்கு வழங்க வேண்டும் என்றும், இதுகுறித்து விரிவாக வாதம் செய்ய தயாராக உள்ளதாகவும் கூறினார்.

இதை அடுத்த விசாரணையின்போது பரிசீலிக்கலாம் என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை 18-ந்தேதி தள்ளிவைத்தனர்.

Next Story