ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் முதல் நாள் வசூலில் முந்தியது யார்?


ரஜினியின் பேட்ட-  அஜித்தின் விஸ்வாசம் முதல் நாள் வசூலில் முந்தியது யார்?
x
தினத்தந்தி 11 Jan 2019 9:26 AM GMT (Updated: 11 Jan 2019 9:58 AM GMT)

நேற்று வெளியான ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் ஆகியவை முதல் நாள் எப்படி உள்ளது? என்ற விவரம் வெளியாகி உள்ளது.

சென்னை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  ரஜினியின் பேட்ட, அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள்  வெளியானது. அதனை ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா போல் கொண்டாடினர். இரண்டு படங்களுக்கும்  கலவையான  விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இவ்விரு படங்களும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாட்டில் 500 க்கும் அதிகமான திரைகளில் விஸ்வாசம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 150க்கும் மேற்பட்ட காட்சிகள் நடைபெற்று உள்ளது. இதேபோல் ரஜினிகாந்தின் பேட்ட படமும்  வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளன்று விஸ்வாசம் ரூ. 16-18 கோடி வசூலித்துள்ளதாக வர்த்தக வட்டாரத்தில்  இருந்து வரும் ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சில வர்த்தக ஆய்வாளர்கள் ரூ 20-22 கோடியை வசூலித்து உள்ளதாக  கணித்துள்ளனர். இது ஒரு  அதிகாரபூர்வமற்ற மதிப்பீடாகும், இறுதியில் மாறுபடும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ரஜினிகாந்தின் பேட்ட படமும்  அதே நாளில் வெளியானது. இருப்பினும், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றவர் யார் என்பது தெரியவில்லை. ரஜினியின் பேட்ட  முதல் நாளில் 16 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக  வர்த்தக வட்டாரத்தில்  இருந்து வரும் கடினமான மதிப்பீடு காட்டுகிறது.

சென்னையில், பேட்ட ரூ. 1.12 கோடி வசூலித்துள்ளது. விஸ்வாசம் ரூ.88 லட்சம் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தமிழ்நாட்டிற்கு வெளியே விஸ்வாசத்தை பேட்ட  முந்தியது. கர்நாடகம் போன்ற வெளிமாநிலங்களிலும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பேட்ட,  விசுவாசத்தை விட நன்கு வசூலித்து உள்ளது.

Next Story