இந்திய வானொலி நிலையம் சார்பில் சென்னையில், 22 மொழி கவிஞர்கள் பங்கேற்ற கவிதை நிகழ்ச்சி கவர்னர் தொடங்கி வைத்தார்


இந்திய வானொலி நிலையம் சார்பில் சென்னையில், 22 மொழி கவிஞர்கள் பங்கேற்ற கவிதை நிகழ்ச்சி கவர்னர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Jan 2019 9:00 PM GMT (Updated: 11 Jan 2019 8:04 PM GMT)

இந்திய வானொலி நிலையம் சார்பில் 22 மொழி கவிஞர்கள் பங்கேற்ற கவிதை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி இந்திய வானொலி நிலையம் சார்பில் அகில பாரத கவி சம்மேளனம் என்ற பெயரில் பன்மொழி கவியரங்கத்தை நடத்தி வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு அகில பாரத கவி சம்மேளனம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடந்தது.

அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தென்மண்டல கூடுதல் தலைமை இயக்குனர் ராம்குமார் உபாத்யாய் தலைமை தாங்கினார். அகில இந்திய வானொலி தலைமை இயக்குனர் பயாஸ் செகரியார், சென்னை நிலைய இயக்குனர் வி.சக்ரவர்த்தி, கூடுதல் தலைமை இயக்குனர்கள் (பொறியியல்) ராமச்சந்திரன், தியாகராஜன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மொழி நல்லிணக்கம்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கவியரங்கத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “பன்மொழி கவிஞர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி மொழி நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகும். திருவள்ளுவர், மகாகவி பாரதி, அவ்வையார் போன்ற ஒப்பற்ற கவிஞர்களால் தமிழ் மொழியின் மேன்மை இன்னும் உலக நாடுகளால் பறைசாற்றப்படுகிறது”, என்றார்.

கவியரங்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், சமஸ்கிருதம் உள்பட 22 மொழி கவிஞர்கள் பங்கேற்று கவிதைகள் அரங்கேற்றி னர். இது தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.திலகவதி, முனைவர்கள் ம.ராஜேந்திரன், ஆர்.ராஜகோபாலன், மின்னூர் ஸ்ரீனிவாசன், ஆர்.சிவகுமார், என்.வி.சுப்பராமன், எழில்வேந்தன் உள்பட 21 பேர் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களாக பங்கேற்றனர்.

சென்னையில் முதல்முறை

முன்னதாக கவியரங்கத்தில் பங்கேற்ற கவிஞர்களுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொன்னாடை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும் கவுரவித்தார்.

இந்திய வானொலி நிலையம் நடத்தி வரும் அகில பாரத கவி சம்மேளன நிகழ்ச்சி, சென்னையில் அரங்கேறியது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story