15 கிலோ மீட்டர் வேகத்தில் பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயிலை இயக்கி மீண்டும் சோதனை


15 கிலோ மீட்டர் வேகத்தில் பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயிலை இயக்கி மீண்டும் சோதனை
x
தினத்தந்தி 11 Jan 2019 9:00 PM GMT (Updated: 11 Jan 2019 8:15 PM GMT)

பாம்பன் தூக்குப்பாலத்தில் 2-வது முறையாக ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரெயில் பாலமாகும். இந்த பாலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூக்குப்பாலத்தில் கடந்த மாதம் 4-ந்தேதி திடீரென விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.

கடந்த 7-ந்தேதி இந்த பாலத்தில் 10 கிலோ மீட்டர் வேகத்தில், காலிப்பெட்டிகளுடன் ரெயிலை இயக்கி அதிர்வுகளையும், பாலத்தின் உறுதித்தன்மையையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் நேற்று 2-வது முறையாக ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. ராமேசுவரத்தில் இருந்து 8 பெட்டிகளுடன் கூடிய ரெயில் பாம்பன் பாலத்தில் மெதுவாக இயக்கப்பட்டது. தூக்குப்பாலத்தின் மையப்பகுதியில் வந்ததும் அந்த ரெயில் நிறுத்தப்பட்டு, பின்னர் முன்னும், பின்னுமாக இயக்கி சோதனை செய்யப்பட்டது. அந்த ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தில் 10 முதல் 15 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாம்பன் பாலத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கை வந்த பின்புதான் பாம்பன் பாலத்தில் பயணிகள் ரெயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

Next Story