சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி வல்லூர் மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டது மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுமா?


சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி வல்லூர் மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டது மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுமா?
x
தினத்தந்தி 11 Jan 2019 10:15 PM GMT (Updated: 11 Jan 2019 8:31 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, வல்லூர் மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மின்சார வினியோகத்தில் தடை ஏற்படுமா? என்பதற்கு மின் பகிர்மானக் கழக அதிகாரி பதில் அளித்துள்ளார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் அனல் மின்நிலையம் இயங்குகிறது. தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) மற்றும் என்.டி.பி.சி. என்ற மின்சார நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் 3 அலகுகளை (யூனிட்) இயக்கி வருகின்றன.

ஒவ்வொரு யூனிட்டில் இருந்தும் தலா 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வகையில் ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கப்பெற்று, தமிழகத்தின் மின்சாரத் தேவையில் ஓரளவை வல்லூர் அனல் மின்நிலையம் பூர்த்தி செய்கிறது.

ஆயிரம் மெகாவாட் கிடைக்காது

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் இடைக்கால உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பித்தது. அதில், வல்லூரில் உள்ள அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியாகும் மணல் கலந்த சாம்பல் கழிவுகளை எண்ணூரில் உள்ள சதுப்பு நிலப் பகுதிகளில் கொட்டக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து வல்லூரில் உள்ள அந்த 3 யூனிட்களுமே உடனடியாக மூடப்பட்டன. இதனால் தமிழகத்துக்கு உடனடியாக கிடைக்க வேண்டிய ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்காமல் போய்விடும் நிலை எழுந்துள்ளது.

சவால்

தமிழகத்தில் தற்போது குளிர்காலம் தொடர்ந்தால்கூட, தமிழகத்தின் மின் தேவை 14 ஆயிரத்து 500 மெகாவாட் என்ற உச்சநிலையை எட்டியுள்ளது. எனவே இதுபோன்ற மின் உற்பத்திக் குறைபாடு ஏற்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலத்தில் மக்களுக்கு தடையில்லாத மின்சார வினியோகம் செய்வது சவாலாக அமையக்கூடும்.

மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதா என்று கேட்டபோது, “மின்சார வினியோகத்தில் இடையூறு ஏற்பட்டாலும் மின்தடை ஏற்படாது. ஏனென்றால், தேவைக்கு ஏற்ப வெளிச்சந்தையில் மின்சாரத்தை டான்ஜெட்கோ வாங்கி வினியோகம் செய்யும் என்று டான்ஜெட்கோ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

வெவ்வேறு வழிகள்

மேலும் அவர் கூறியதாவது:-

இன்னும் சில நாட்களில் இந்த 3 யூனிட்களையும் திறக்க முடியுமா என்பது தெரியவில்லை. காற்றாலை மின்சாரத்தையும் பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது. கூடங்குளத்தில் அணு மின்சார உற்பத்தி யூனிட் ஒன்று பராமரிப்புக்காக தற்போது மூடப்பட்டுள்ளது. எனவே மின் உற்பத்தியை அதிகரிக்க வெவ்வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மின் உற்பத்தி நடக்காது

வல்லூரில் உள்ள ஒவ்வொரு யூனிட்டும் தலா 500 மெகாவாட் மின்சக்தி கொண்டதாகும். இவை கடந்த 2010-12-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அமைக்கப்பட்டன. ஆனால் இவை சில காரணங்களுக்காக மூடப்படுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதற்கு நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

அந்த 3 யூனிட்களிலும் உள்ளூர் நிலக்கரி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் இவை மூன்றிலுமே மின்சார உற்பத்தி நடக்காது. இந்த யூனிட்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

Next Story