கொடநாடு ஆவண வீடியோ: மேத்யூஸ் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் வழக்குப்பதிவு
கொடநாடு வீடியோ விவகாரத்தில் மேத்யூஸ் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம் பகதூர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோத்தகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் சிக்கி ஏப்ரல் 28-ஆம் தேதி உயிரிழந்தார். இவரது கூட்டாளி சயன், தனது மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோருடன் ஏப்ரல் 29-ஆம் தேதி கேரளத்துக்கு காரில் சென்றபோது பாலக்காடு அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்தில் வினுபிரியா, நீது ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த சயன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக கூலிப்படையை சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ராய், ஜம்ஷே அலி, மனோஜ், ஜிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடநாடு காவலாளி உட்பட 5 பேர் கொலை மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக தான் நடத்திய புலனாய்வு குறித்த ஆவணப்படத்தை தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் வெளியிட்டு உள்ளார். அதில் கொடநாடு கொலை, கொள்ளையில் நடந்தது என்ன என்பது குறித்து டெல்லியில் செய்தியாளர் மேத்யூஸ் விளக்கம் அளித்து உள்ளார்.
அப்போது முதல்வர் எடப்படி பழனிசாமி குறித்தும் அவர் குற்றஞ்சாட்டினார். கொலை தொடர்பாக வெளியிட்ட ஆவணங்களை கொண்டு விசாரணை நடத்த தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த ஆவணப்படம் தொடர்பாக விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் எங்கள் மீது பல தவறான தகவல்களை பரப்புகின்றனர் .
குறுக்கு வழியை கையாண்டு அதிமுக அரசை கவிழ்க்க பலர் சதி செய்து வருகின்றனர்.ஜெயலலிதா எந்த நிர்வாகிகளிடமும் எந்த ஆவணமும் பெற்றதில்லை. கொடநாடு கொலை, கொள்ளை பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.கொடநாடு கொள்ளை குறித்த வீடியோ ஆவணம் குறித்த புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.
இந்த நிலையில் கொடநாடு வீடியோ விவகாரத்தில் மேத்யூஸ் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story