நகையை பறித்த திருடனுடன் போராடிய மூதாட்டி கையை கடித்து கூச்சலிட்டதால் தப்பி ஓடினான்


நகையை பறித்த திருடனுடன் போராடிய மூதாட்டி கையை கடித்து கூச்சலிட்டதால் தப்பி ஓடினான்
x
தினத்தந்தி 12 Jan 2019 10:15 PM GMT (Updated: 12 Jan 2019 9:19 PM GMT)

திருச்சி பொன்மலை அருகே நகையை பறித்த திருடனுடன் மூதாட்டி கடுமையாக போராடினார். அப்போது திருடனின் கையை கடித்து கூச்சலிட்டதால் அவன் தப்பி ஓட்டம் பிடித்தான்.

திருச்சி

திருச்சி பொன்மலை அருகே உள்ள திருநகர் முதல் தெருவை சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 62). மரியதாஸ், திருச்சி கோட்ட ரெயில்வேயில் ஊழியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வி கணவரின் ஓய்வூதியத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களாக தமிழ்ச்செல்வி உடல் நலமின்றி, பொன்மலையில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். அதன்படி, நேற்று காலை 9.30 மணிக்கு ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு வீட்டில் இருந்து சைக்கிளில் தமிழ்ச்செல்வி சென்றார்.

திருடனிடம் போராடிய மூதாட்டி

பொன்மலை சூசையப்பர் கோவில் அருகே கடந்து சென்றபோது, அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் 2 ஆசாமிகள் மரத்து நிழலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மூதாட்டி தமிழ்ச்செல்வி தனியாக வருவதை கண்காணித்தனர். அருகில் வந்ததும் அவர்களில் ஒருவன், திடீரென வழிமறித்து மூதாட்டி கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றான். சுதாரித்துக் கொண்ட மூதாட்டியோ நகையை கெட்டியாக பிடித்துக் கொண்டு திருடனுடன் போராடினார்.

ஆனால், திருடனும் விடுவதாக இல்லை. மூதாட்டி தலையை பிடித்து தள்ளினான். அப்போது, மூதாட்டி திருடனின் கையை கடித்ததோடு, திருடன்...திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு 2 பேர் ஓடிவந்தனர். அதைப்பார்த்ததும் திருடன் மூதாட்டி கழுத்தில் கிடந்த நகையை பறிப்பதை விட்டான். பின்னர் தப்பித்தால் போதும் என இருவரும் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

போலீசார் பாராட்டு

அதன்பிறகு பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் திருடனுடன் தைரியமாக போராடி நகையை பறிகொடுக்காமல் தக்கவைத்த தமிழ்ச்செல்வியை போலீசார் பாராட்டினர்.

Next Story