தாய்லாந்தில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி தங்கம் பறிமுதல் 2 பெண்கள் கைது


தாய்லாந்தில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி தங்கம் பறிமுதல் 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 12 Jan 2019 10:45 PM GMT (Updated: 12 Jan 2019 9:37 PM GMT)

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்க கட்டிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று அதிகாலை சென்னைக்கு விமானம் வந்தது. அதில் தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹாங்பியுல் ஜாங் (வயது 26), பங்யாங் கிம் (26) ஆகிய 2 பெண்கள் சுற்றுலா விசாவில் வந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் சந்தேகப்படும்படியாக அங்கும், இங்குமாக சுற்றினார்கள்.

ரூ.8 கோடி தங்கம்

இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவர்கள் இருவரிடமும் விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் பெண் சுங்க இலாகா அதிகாரிகள் மூலமாக இருவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் 2 பெண்களும் தங்களது ஆடைகளிலும், உள்ளாடைகளிலும் தலா ஒரு கிலோ எடை கொண்ட 24 தங்க கட்டிகளை மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கைது

இதையடுத்து தென் கொரியாவை சேர்ந்த 2 பெண்களையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் இருவரும் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா?. யாருக்காக அந்த தங்க கட்டிகளை கொரியாவில் இருந்து தாய்லாந்து வழியாக சென்னைக்கு கடத்தி வந்தனர்? என விசாரித்து வருகின்றனர்.

ஆனால் 2 பெண்களும் சென்னைக்கு சென்று அந்த தங்க கட்டிகளை கொடுத்தால் பணம் தருவதாக கூறியதால் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story