கோடநாடு விவகாரம்; ஆளுநர், ஜனாதிபதியிடம் முறையிடப்படும்: மு.க. ஸ்டாலின் பேட்டி


கோடநாடு விவகாரம்; ஆளுநர், ஜனாதிபதியிடம் முறையிடப்படும்:   மு.க. ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 13 Jan 2019 8:36 AM GMT (Updated: 13 Jan 2019 8:36 AM GMT)

கோடநாடு விவகாரம் பற்றி ஆளுநர் பன்வாரிலாலை நாளை சந்தித்து முறையிட உள்ளோம் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, தெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், டெல்லியில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி நடைபெற்ற ஒரு சம்பவத்தில் என்னை (எடப்பாடி பழனிசாமி) சம்பந்தப்படுத்தி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. துளியும் உண்மை இல்லை.

இந்த செய்தியை வெளியிட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு பின்புலமாக உள்ளவர்கள் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த மரணங்களின் பின்னணி என்ன? கோடநாடு விவகாரத்தில் சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.

கோடநாடு விவகாரம் தொடர்பாக நாளை ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து முறையிட உள்ளோம்.  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடமும் முறையிட உள்ளோம். 

கோடநாடு விவகாரத்தில் எந்த பதிலையும் தராத முதல் அமைச்சர் வழக்கு மட்டுமே நடப்பதாக கூறுகிறார்.  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வரால் கூற முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story