தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பதக்கம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு


தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பதக்கம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 14 Jan 2019 10:45 PM GMT (Updated: 14 Jan 2019 7:13 PM GMT)

பொங்கல் திருநாளையொட்டி 3 ஆயிரத்து 186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, மற்றும் சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர் (நிலை-1 மற்றும் நிலை-2), தலைமைக் காவலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்), சிறப்பு சார்பு ஆய்வாளர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் ஆயுதப்படையில் ஹவில்தார் நிலைகளில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பணிபுரியும் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு ‘தமிழக முதல்-அமைச்சரின் காவல் பதக்கங்கள்’ வழங்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர், ஓட்டுநர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல்நிலை வார்டர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்கள்) 60 பணியாளர்களுக்கும் ‘தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க முதல்- அமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேற்படி பதக் கங்கள் பெறுபவர்களுக்கு மாதாந்திர பதக்கப்படியாக தலா ரூ.400 வரும் பிப்ரவரி 1-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது.

இவர்கள் அனைவருக்கும் காவல் துறை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை இயக்குநர், மற்றும் சிறைத்துறை தலைவரால் மாவட்டத் தலைநகரங்களில் பின்னர் நடைபெறும் அரசு விழாக்களில் பதக்கங்கள் வழங்கப்படும்.

இந்த ஆண்டு முதல் 1,500 பதக்கமாக வழங்கப்பட்டு வந்த காவல் பதக்கம் 3 ஆயிரமாக உயர்த்தப்படுவதுடன், சிறப்பு சார்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், நாய் படைப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகளுக்கு அவர்களது தொழிற்சிறப்பு மற்றும் மாசற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் ‘தமிழக முதல்-அமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது.

இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்கத் தொகையாக காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலையில் ரூ.4 ஆயிரமும், சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில் ரூ.6 ஆயிரமும், காவல் துணை கண்காணிப்பாளர் நிலையில் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில் மேற்படி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, முதல்-அமைச்சரால் பதக்கங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story