அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அசம்பாவிதங்கள் இன்றி சிறப்புடன் நடைபெற்றது; மதுரை ஆட்சியர் பேட்டி


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அசம்பாவிதங்கள் இன்றி சிறப்புடன் நடைபெற்றது; மதுரை ஆட்சியர் பேட்டி
x
தினத்தந்தி 15 Jan 2019 12:51 PM GMT (Updated: 15 Jan 2019 12:51 PM GMT)

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அசம்பாவிதங்கள் இன்றி சிறப்புடன் நடைபெற்றது என மதுரை ஆட்சியர் கூறியுள்ளார்.

மதுரை,

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.  மதுரை ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  இதனை தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

இதுபற்றி மதுரை ஆட்சியர் நடராஜன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஜல்லிக்கட்டு போட்டிக்காக 533 காளைகள் வந்தன.  இவற்றில் 475 காளைகள் போட்டியில் பங்கேற்றன.  150 காளைகள், வீரர்களிடம் பிடிபட்டன.  550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் சிறப்புடன் நடைபெற்றது என கூறினார்.

இதனை தொடர்ந்து, எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், வேறுபாடின்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினோம்.  எந்தவித அசம்பாவிதமும் இன்றி போட்டி நடந்தது.  இந்த பெருமை அனைத்தும் மதுரை ஆட்சியரையே சேரும் என அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழு தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் தெரிவித்து உள்ளார்.

Next Story