கோடநாடு விவகாரம்; அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறுகிறார்: அ.தி.மு.க.


கோடநாடு விவகாரம்; அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறுகிறார்:  அ.தி.மு.க.
x
தினத்தந்தி 15 Jan 2019 1:19 PM GMT (Updated: 15 Jan 2019 1:19 PM GMT)

கோடநாடு விவகாரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறுகிறார் என அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

சென்னை,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.

இதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மற்றொரு குற்றவாளியான மனோஜ், ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர்.

அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டினார்கள்.  மேலும் கோடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.

இந்த நிலையில், கோடநாடு விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அவருடன் டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ. ராசா ஆகியோர் உடன் சென்றனர்.

கோடநாடு விவகாரம் தொடர்பாக கவர்னரிடம் நேரில் முறையிட்டார்.  கோடநாடு  கொலை கொள்ளை வீடியோ விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தக்கோரி மனு அளித்தார். பின்னர் மு.க. ஸ்டாலின் பேட்டி அளிக்கும் போது, ஐ.ஜி. ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறினார்.

இந்த நிலையில் அ.தி.மு.க  துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் எம்.பி., ஜெயவர்தன் எம்.பி. மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தனர்.

இந்த நிலையில், ஆளுநரை சந்தித்த பின் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.  அவர் அளித்த பேட்டியில், கோடநாட்டில் என்ன இருந்தது என்பதை சசிகலா தான் சொல்ல வேண்டும்.  கோடநாடு விவகாரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறுகிறார்.  தவறான கருத்து கூறினால் 7 வருட சிறை உண்டு என ஸ்டாலின் உணர வேண்டும் என கூறியுள்ளார்.

கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் நாங்கள் விளக்கினோம்.  உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் எங்களுக்கு சாதகமான பதிலை கூறினார் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story