நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் -எடப்பாடி பழனிசாமி
நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்
சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டு உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச்சிலைகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.
சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயரை முதல்வர் பழனிசாமி சூட்டினார்.
அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா மகுடஞ்சாவடியில் நடைபெற்றது. அந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
இதில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.138 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நல உதவிகளையும் வழங்கினார். பின்னர் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
அமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் எத்தனை கிராமங்களுக்கு சென்றார்..? தேர்தல் வர இருப்பதால் ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் நாடகமாடுகின்றன. இந்த ஆட்சியில் எந்த நலனும் செய்யவில்லை என தவறான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள்.
யார் உண்மையாக உழைக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். உள்ளாட்சிகளில் பயணம் செய்து மக்களின் தேவை அறிந்து இலவச திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என கூறினார்.
Related Tags :
Next Story