ரூ.7 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
துபாய் மற்றும் இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 6 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை
சென்னை சூளைமேட்டில் துபாய் மற்றும் இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 6 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 20 கிலோ தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பி.எம்.டபிள்யூ. கார் ஒன்றை சோதனையிட்டபோது அதில் ஏராளமான தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் காரில் இருந்த 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த நபர், விமானப் பயணிகள், மற்றும் உள்ளூர் உதவியாளர்களைக் கொண்டு தங்கக் கட்டிகளை கடத்தி விற்பனை செய்வது தெரியவந்தது.
அந்த வகையில் துபாயில் இருந்து மும்பை வழியாகவும், இலங்கையிலிருந்தும் கடத்தி வரப்பட்ட 20 கிலோ 600 கிராம் தங்கக் கட்டிகளை பி.எம்.டபிள்யூ காரில் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
காரில் இருந்தவர்கள் கும்பலின் தலைவனும் மூன்று உதவியாளர்களும் என்றும் தெரியவந்தது. அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story