சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசு ஒப்புதல்


சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 19 Jan 2019 8:33 PM GMT (Updated: 19 Jan 2019 8:33 PM GMT)

சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னை,

சென்னை-தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையில், சென்னை-தூத்துக்குடி இடையே புதிதாக 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டமானது சுமார் ரூ.13,200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக, சமீபத்தில் தமிழக அரசுடன் மத்திய சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தமிழக அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. தற்போது, 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை-தூத்துக்குடி இடையே நிறைவேற்றப்படும் இந்த திட்டத்தில், சென்னையில் இருந்து விழுப்புரம் வரை 10 வழிச்சாலையாக அமைக்கப்பட இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூர், திருச்சி வரை 8 வழிச்சாலையாக கொண்டுவரப்பட இருக்கிறது. தஞ்சாவூர், திருச்சியில் இருந்து சிவகங்கை வழியாக தூத்துக்குடிக்கு 6 வழிச்சாலை அமைய இருக்கிறது. அதாவது, சென்னையில் இருந்து பண்ருட்டி, விருத்தாசலம், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, தூத்துக்குடி என இந்த புதிய வழித்தடம் அமைய உள்ளது.

இந்த புதிய சாலை அமைவதன் மூலம் சுமார் 100 கிலோ மீட்டர் அளவுக்கு பயண தூரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சென்னை-தூத்துக்குடி இடையே தூரம் 600 கிலோ மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சாலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்ததும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, சாலை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் 2 முறை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருக்கிறார். இனி, நிலப்பரப்பை ஆய்வு செய்வது, எந்த வழியாக சாலையை அமைப்பது, எவ்வளவு இடத்தை கையகப்படுத்த வேண்டும் என்பது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன.

Next Story