ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்


ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்
x
தினத்தந்தி 19 Jan 2019 11:15 PM GMT (Updated: 19 Jan 2019 9:15 PM GMT)

ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 2018-2023 புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2018-2023 என்ற புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுக்கு 11 சதவீதம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்பது தமிழ்நாடு தொலைநோக்கு பார்வை -2023 என்ற கொள்கையின் நோக்கமாகும். இதை அடைவதற்கும், நாட்டிலேயே மிகப்பெரிய அறிவுசார் மூலதனம் மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக தமிழகத்தை மாற்றுவதற்கும் இந்த புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை வழிவகுக்கும்.

அதோடு, தமிழகத்தை புதிய தொழில் முனைவோருக்கான உலக அளவில் மிகச் சிறந்த தேர்விடமாக 2023-ம் ஆண்டுக்குள் உருவாக்குவதுதான் இந்த கொள்கையின் தொலைநோக்காக அமைந்துள்ளது.

தமிழகத்தில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில்களை உருவாக்கிட தேவையான ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்படும். துப்புரவு, உணவு, பசுமை ஆற்றல், சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் உள்ள பிரச்சினைகளுக்கு புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வு காணும் வகையில் குறைந்தபட்சம் 10 உலகளாவிய உயர் வளர்ச்சிக்கான புத்தொழில்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்.

போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், மின் மற்றும் மின்னணு, சுகாதாரம், உயிரி தொழில்நுட்பம், விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாற்றம், நிதிநுட்பம், ஜவுளித்துறை, தகவல் தொடர்பு, இணையங்கள் பற்றிய விவரம், செயற்கை நுண்ணறிவு, எந்திரம் குறித்த படிப்பு, மென்பொருள் சேவைப் பணி போன்றவை முன்னுரிமை துறைகளாக கண்டறியப்படும்.

இந்த துறைகளில் உருவாக்கும் புத்தொழில்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதோடு, தற்போதுள்ள நடைமுறைகள் மேம்படுத்தப்படும்.

புதிய தொழில்முனைவுக்கான கலாசாரம் உருவாக்கப்படும். தொடக்க நிலை புத்தொழில்களுக்கு தேவைப்படும் சிறப்பு உதவிகள் மூலம் அவற்றை தரமான புதிய தொழில்களாக வளர்க்க ஆதரவு தரப்படும்.

தமிழகத்தில் உள்ள புத்தொழில்களில் முதலீடு செய்ய நாட்டின் பிற பகுதிகள் மற்றும் உலக அளவில் சிறந்த முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், ஈரோடு, திருநெல்வேலி போன்ற பகுதிகளை மாபெரும் புத்தொழில் மையங்களாக உருவாக்கி, அதிக முதலீடுகளைப் பெற ஊக்கப்படுத்தப்படும். ஒரு நிறுவனத்தை புத்தொழிலாக அங்கீகரிக்க நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன.

99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் புத்தொழில் பூங்காவை அமைக்க தேவையான நிலத்தை சலுகை விலையில் தொழில் முனைவோர் மற்றும் புலம்பெயர் வெளிநாடு வாழ் இந்தியத் தமிழர்களுக்கு அரசு வழங்கும். குறைந்தபட்சம் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை புத்தொழில் சூழலில் உருவாக்குவது இந்த கொள்கையின் நோக்கமாகும். பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் புத்தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story