முகப்பேரில் லேத் பட்டறை அதிபர் கொலை மனைவி, மகள், மருமகன் கைது


முகப்பேரில் லேத் பட்டறை அதிபர் கொலை மனைவி, மகள், மருமகன் கைது
x
தினத்தந்தி 21 Jan 2019 10:45 PM GMT (Updated: 21 Jan 2019 9:26 PM GMT)

முகப்பேரில் லேத் பட்டறை அதிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய மனைவி, மகள், மருமகனை கைது செய்த போலீசார் தலைமறைவான உறவினரை தேடி வருகின்றனர்.

அம்பத்தூர்,

சென்னை முகப்பேர் கலெக்டர் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஏசுராஜன் (வயது 70). இவர், அத்திப்பட்டி பகுதியில் சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வந்தார்.

இவருடைய மனைவி கலா (61). இவர்களுக்கு அருள்ராஜ் என்ற மகனும், ஜோஸ்பின் (41) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

தனக்கு சொந்தமான வீட்டின் முதல் தளத்தில் ஏசுராஜன், தனது மனைவி கலாவுடன் வசித்து வந்தார். கீழ் தளத்தில் அருள்ராஜ், தனது மனைவி அல்போன்ஸ் ரூபியுடனும், அதே தெருவில் மகள் ஜோஸ்பின், கணவர் பிரான்சிஸ் (46) உடனும் வசித்து வருகின்றனர்.

ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக ஏசுராஜனுக்கும், அவருடைய மனைவி கலாவுக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. இதனால் ஏசுராஜனுக்கு 3 வேளை சாப்பாடும் அவரது மகன் வீட்டில் இருந்து மருமகள் அல்போன்ஸ் ரூபி கொடுத்து வந்தார்.

இதனால் ஏசுராஜன், மருமகள் அல்போன்ஸ் ரூபியுடன் சகஜமாக பேசி வந்தார். இது கலா மற்றும் அவரது மகள் உள்பட குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது.

இதுபற்றி கலா தனது தூரத்து உறவினரான தம்பி முறை கொண்ட பெருங்களத்தூரை சேர்ந்த கோபாலிடம் தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் ஏசுராஜனிடம் இது தொடர்பாக கோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கலா, மகள் ஜோஸ்பின், மருமகன் பிரான்சிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பேச்சுவார்த்தையின் போது கோபாலுக்கும், ஏசுராஜனுக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த கோபால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஏசுராஜனை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் கழுத்து, மார்பு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த ஏசுராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏசுராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஜெ.ஜெ.நகர் போலீசார், ஏசுராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

ஏசுராஜன் தனது மருமகளுடன் சகஜமாக பேசுவது கலாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது சொத்துகள், பணம், லேத் பட்டறை அனைத்தையும் தனது மகன், மருமகள் பெயருக்கு எழுதி வைத்து விடுவாரோ? என்று பயந்த கலா, இதுபற்றி தனது தம்பி கோபாலிடம் கூறி கணவர் ஏசுராஜனை மிரட்டி வைக் கும்படி அழைத்து வந்தார்.

இதற்காக வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கோபால், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதால் ஆத்திரத்தில் ஏசுராஜனை கத்தியால் குத்தி கொலை செய்தது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த ஏசுராஜனின் மனைவி கலா, மகள் ஜோஸ்பின், மருமகன் பிரான்சிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய கோபாலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story