ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்


ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 22 Jan 2019 6:13 AM GMT (Updated: 22 Jan 2019 6:13 AM GMT)

ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். 

அதை எதிர்த்து, மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நீதிபதிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. தங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்று கூறி, கைவிடப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்க இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதன்படி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், “ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். வேலைநிறுத்தத்தை கைவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும்” என்றார். 

Next Story